Posts filed under 'நினைவுகள்'

பூனாவில் பொங்கல்

ஒரு வாரம் லீவ் என்பதாலும், அக்காவின் குழந்தையைப் பார்க்க இதைவிட்டால் வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதாலும், இந்த வருடம் பொங்கலை பூனேவில் கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து கொண்டாடியும் முடித்தாகிவிட்டது. 14 மணி நேர பயணம் இனிதாக இருந்தது, பயணத்தின் போது ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது. K.S.R.T.C யில் கன்னட படங்களை தவிர வேறு மொழி படங்கள் போடக் கூடாது என்பது தமிழ்நாட்டிற்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான். ஏனென்றால் நான் வந்த பேருந்தில் ஹிந்தி படமும் பாட்டும் தான் ஓடியது. சரி ஹிந்தி தான் கொஞ்சம் கொஞ்சம் பார்க்கலாம் என நினைத்தால், போன வாரம் பார்த்த அதே கஜினி. சரி என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கும் போது தான் அவளை கண்டேன். இரவு முழுவதும் அவளுடன் பேசுவதிலியே பொழுது சென்றது. நான் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

சரி நம்ம பொங்கலுக்கு வருவோம். பொங்கல் சூப்பராக சென்றது. பூனாவில் நம்ம ஊர் ஐட்டங்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தாலும் அலைந்து திரிந்து வாங்கி பொங்கலை கொண்டாடினோம். அப்பறம் வழக்கம்போல டிவியில் போட்ட படங்கள், நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே பொழுது போனது. நிகழ்ச்சிகளில் கவனத்தில் நின்றது இரண்டு விசயங்கள், ஒன்று நடிகர் சிவகுமார் தன் புத்தகத்தை பற்றி பேசியது, மற்றொன்று சாலமான் பாப்பையா பட்டி மன்றம். சிவகுமார் காதலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் கூரியவற்றின் கருத்து என் மொழியில் பின் வருமாறு, “எல்லார்க்கும் டீனேஜ்ல ஒரு சுடர் உருவாகுது, அத ஒழுங்கா பயன்படுத்தினா இன்ஸ்டெய்ன் ஆகலாம் வாழ்க்கையில் நிறையா சாதிக்கலாம். ஆனால் டீனேஜில் வரும் காதலில் மாட்டிக் கொண்டால் எரிந்தும் போகலாம். டீனேஜில் வரும் காதல் ஆற்றில் உள்ள முதலையை போன்றது, யானையைக் கூட நீரில் இழுத்துக் கொன்றுவிடும். காதல் என்பது ஒன்றும் இல்லை இனவிருத்திக்கான ஒரு முதல் படி. ஆகவே இளைஞர்களே டீனேஜில் காதல் செய்யாதீர்கள், முதலில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள், பின்பு காதலை பற்றி சிந்தியுங்கள்”. சாலமான் பாப்பையாவின் பட்டி மன்றமும் கிட்டத்தட்ட இது போன்றே இருந்தது. என் கருத்தும் இந்த விசயத்தில் இதே போன்று இருந்ததனால் என்னை கவர்ந்தது. வேறு நிகழ்ச்சிகளை பற்றி பெரிதாக சொல்வதற்கு இல்லை. வழக்கம் போல தமிழ் தெரியாத நடிக நடிகைகள் தங்களுக்கு தெரிந்த தமிழிலும், தமிழ் தெரிந்த நடிகைகள் தமிழ் தெரியாதது போலவும் பேசி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.ஜனவரி 14ஐ தமிழ் வருடப்பிறப்பு என கலைஞர் அறிவித்து இருந்தாலும், யாரும் அதைக் கொண்டாடியது போல் தெரியவில்லை, நானும் தான்.

பின்குறிப்பு: சரி பேருந்தில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன் என்றேனே, யார் என்ற சந்தேகம் இன்னும் இருந்தால், கீழே வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள், அது வேறு யாரும் இல்லை நிலா தான்.

Add comment ஜனவரி 15, 2009


 

December 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்