Posts filed under 'கற்பனை'
கற்பனைக் கோட்டை
காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து. தலையில் விழுந்த குட்டு தாங்க முடியாமல் அலாரம் வாயை மூடிக் கொண்டது. தூங்கவும் முடியாமல், தூக்கத்திலிருந்து எழவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தான் அவன், கதையின் கதாநாயகன். அலாரம் உதவுவதைவிட அவனுக்கு அதிகமாக உதவுவது ஒவ்வொரு நாளும் இருக்கும் மீட்டிங் தான். அன்றும் இருந்தது 9.30க்கு.
அதிவேகமாக கிளம்பினாலும், அலுவலகம் செல்ல நேரமாகிவிடும் போல் இருந்ததால், ஆட்டோவின் உதவியை நாடினான். 2 கிலோமீட்ட்ருக்கு 50 ருபாய், கேட்டான். “என்னனே இவ்ளோ ?” என்றதற்கு, “அங்க திரும்ப சவாரி கிடைக்காது சார், சாப்ட்வேர் இஞ்சினியர் நீங்களே இப்படி சொல்லலாமா ?” என்பது தான் பதில். ஆனால் அவன் ஆட்டோவில் செல்லவில்லை. அட்டோகாரன் அதிகம் கேட்டாலும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் காரணம், காய்கறி விலை கூடினாலும் அவர்களே தான் காரணம். இவ்வளவு நாள் அரசு ஊழியர்கள் இப்பொழுதோ சாப்ட்வேர் இன்ஜினியர்கள், மக்களுக்கு குறை சொல்ல யாராவது இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எப்படியோ கம்பெனிக்கு 9.31கு சென்றுவிட்டான். 11.00 க்கு மீட்டங் சுபமாக முடிந்தது. இருந்தாலும் அவன் மேனேஜர் முகம் மட்டும் உர் என ஏன் இருந்தது என புரியவில்லை.
கையில் காபியுடன் அவுட்லுக்குள் லுக்கை செலுத்தினான். தேவையில்லாத மெயில்களுக்கு நடுவே இருந்தது, அவன் மேனேஜரின் மெயில். நேற்று அவன் செய்வதாக சொல்லி இருந்த 10 விஷயங்களில், ஒன்று முடிக்கவில்லை என்றும் அது ஏன் என்றும், இவ்வாறு வேலை செய்தால் உருப்படாது என்பது போலவும் இருந்தது மெயில். இது வழக்கம் தான், எவ்வளவு செய்தாலும் தவறுகள் மட்டுமே தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். அது எப்படி என்பது இதுவரை அவனுக்கு புரிந்ததில்லை. ஆனால் அவரின் மெயில் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கோபம் மட்டும் எரிமலை போல பொங்கி அடங்கும், வேலையின் மீது வெறுப்பு வரும், மேனேஜர் மீது கோபம் வரும். அவனால் முடிந்தது அவ்வளவு தான்.
அடுத்து வேலையில் மூழ்கினான். பிரேசில் கஸ்டமர் கேட்ட விடைகளுக்கு தெளிவாக பதில் அளித்தான். பாவம் அவர்கள் கணக்கில்லாமல் செலவழித்துவிட்டு விடைக்காக நிற்பவர்கள், அவர்களை அவன் என்றும் நிற்க வைப்பதில்லை. அடுத்து ஒரு மணிக்கு சாப்பாடு. சாப்பாடின் வாசனை மட்டுமே போதும் அவனுக்கு, அதற்கு மேல் சாப்பிட தோன்றுவதே இல்லை. ஏன் என்று அவனுக்கும் தெரிந்ததில்லை. பதார்த்தங்களின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும் தினமும், லக் இருந்தால் புழு பூச்சியை சாப்பாட்டில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும், அவ்வளவு தான். என்ன செய்வது. கம்ப்ளெய்ன்ட் செய்தால் வேறு ஒரு ஹோட்டல்காரன் வருவான், ஒரு வாரம் நன்றாக இருக்கும், அடுத்த வாரம் அதே கதை தான்.
சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். நேரம் முடிந்துக் கொண்டே இருந்தது, வேலை இருந்துக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு ஃபோன் செய்தான். பக்கத்து வீட்டு ஆண்டியும் இருந்தார்கள் வீட்டில். ஆண்டியுடன் பேச வேண்டிய சூழ்நிலை. அவர்களோடு அதிகமாக் பேச விரும்புவதில்லை, இருந்தாலும் மாட்டிக் கொண்டான் இன்று,
“என்னப்பா எப்படி போகுது வேலை ? “
“நல்லா போது, ஒன்னும் பிரச்சனை இல்ல”.
“எல்லாம் டவுனுனு கேள்விப்பட்டேன்” (பார்க்கும்போது எல்லாம் இதே கேள்வி தான்).
“ஆமாஆன்டி, எங்க டீம்ல பிரச்சனை இல்ல”
“சரிப்பா மணி கூட சொல்லிட்டே இருந்தான்,சாப்ட்வேர் அவ்வளவு தான், அப்படினு, இது நிலைக்காதுபா, தெரிஞ்சு தான் நாங்க மெக்கானிக்கல் எடுத்தோம்” (தெரிஞ்சா எடுத்தீங்க, cs இல்லைனுல எடுத்தீங்கனு சொன்னா ஒத்துக்கவா போறீங்க ?)
“சரிப்பா உடம்ப பார்த்துக்கோ”
எல்லா வேலையும் முடிச்சுட்டு வர இரவு பன்னிரெண்டு, பெர்சனல் மெயிலை புரட்டிவிட்டு சில வேலைகளை முடித்துவிட்டு படுக்க 2. காலேஜ் நினைவுகள் கண் முன் வந்து நின்றன. சாப்ட்வேர் இஞ்சினியர் பற்றி அவனுக்கு அதுவரை தெரிந்தது எல்லாம், மனசுக்கு பிடித்த வேலை, கம்பெனி முழுவதும் அழகான பொண்ணுக, கை நிறைய சம்பளம், எதையும் வாங்க முடியும் சம்பளம், அவ்வளவு தான். வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது, அப்படி இல்லை என்று. அதுவும் நம்ம தமிழ் படங்கள் “கற்றது தமிழ்”, “அறை எண் 305ல் கடவுள்” எல்லாம் பார்த்தா அவ்வளவு தான். கற்றது தமிழில் காமிச்சது போல அறைக் குறை ஆடைகலுடனும் யாரும் வருவதில்லை, “அறை எண்” படத்தில் காட்டியது போல சும்மா சம்பளம் கொடுப்பதில்லை. ஏன் இவ்வளவு கேவலமாக படங்களில் காட்ட வேண்டும் என்று நினைத்த போது கோபம் வந்தது. கஷ்டப்பட்டு மானத்தோடு உழைத்து வாழ்வதை இப்படி சித்தரிக்கிறார்களே என்று நினைக்கும் போது கோபம் உச்சியைத் தொட்டது. அதுவும் இதை சொல்வது யார் என்றால், பெண்களை அறைக் குறை ஆடைகளுடன் ஆடவைத்து காதலை வத்து காமெடி பண்ணி காசு சம்பாதிக்கும் கோஷ்டி. “என்ன கொடுமை சரவணன் இது” என நினைத்துக் கொண்டான். அவன் காலேஜில் கட்டி வைத்திருந்த கற்பனை கோட்டை மெதுமெதுவாக தகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மக்க்ளின் கற்பனையோ எல்லை இல்லாமல் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு நினைத்துக் கொண்டே தூங்கி போனான். காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து.
1 comment ஜூன் 17, 2009
குட்டையனின் குட்டி கதை
அரை மணி நேர பிராயணம் முடிந்து குட்டையனின் வாசலில் வந்து நின்றது என்னுடைய ஸ்கூட்டி. நம்ம செந்தில் இறங்கியவுடன் அவ்வள்வு நேரம் அமுங்கி இருந்த பின் டயர் உடனே எழுந்தது. அதனால் வந்த ஆட்டத்தை சமாளித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினேன். வீட்டுக்குள் இருந்து குட்டையன் ஒட்டகத்திடம் ஏதோ கத்தி கொண்டு இருந்தான். ஒட்டகமோ அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், குட்டையன் அம்மா வைத்த பலகாரங்களை வாயில் போட்டு அரைத்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் எட்டி பார்த்தோம், யாரை பார்த்தாலும் குரைத்து அட்டகாசம் செய்யும் டைசனோ தன் வேலையை தன் எஜமானர் எடுத்து கொண்டதால் அமைதியக இருப்பது போல படுத்துக் கிடந்தது. கட்டி போடபட்டிருக்கும் டைசனை சமாளிப்பதில் பிரச்சனையே இல்லை, உள்ளே இருக்கும் குட்டையன் தான் பிரச்சனை. “என்னடா இப்படி கத்திட்டு இருக்கான், கெட்ட வார்த்தைலாம் போட்டு திட்டிட்டு இருக்கான் ? நம்மலதானா ?” என நல்ல பிள்ளை போல் கேட்டான் செந்தில். “நாம நேத்து செஞ்சதுக்கு கொஞ்சவா செய்வான் ?” என்றேன். நினைவுகளில் 24 மணிநேரம் பின் நோக்கி பயனித்தோம்.
காலை 9.30 மணி, பள்ளியில் உணவு இடைவேளை. நான், செந்தில் மற்றும் ஒட்டகம் சாப்பிட்டு முடித்துவிட்டு உட்கார்ந்து இருந்தோம். குட்டையனோ, மின்னலை பின் தொடர்ந்து சென்றுவிட்டான். “மின்னல்” வேற யாருமில்லை, அவன் காதிலிப்பதாக சொல்லி கொண்ட பெண் தான். குட்டையனுக்குள் காதலா என்று நாங்கள் வியந்ததுண்டு, பிறகு தான் தெரிந்தது எங்கே நண்பர்கள் ஏதாவது அட்டு ஃபிகரோடு வைத்து ஓட்டிவிடுவர் என்று எண்ணி குட்டையன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று. ஆனால் நாங்களோ அவனையும் மின்னலையும் சேர்த்து வைத்து பேசுவதே இல்லை, மின்னல் அழகு இல்லை என்றாலும் பார்க்கும்படி இருப்பதால் அவனோடு சேர்த்து பேச மனம் இடம் கொடுப்பதில்லை. இருந்தாலும் நாங்கள் பேச வேண்டும் என்பதற்காகவே குட்டையன் ஏதாவது முயற்சி செய்துக் கொண்டே இருப்பான். அந்த முயற்சியில் ஏதாவது ஒன்றாக தான் இதுவும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டோம்.
இந்த இடத்தில் செந்திலை பற்றி சிறிது சொல்ல வேண்டும், செந்தில் ஒரு நல்ல ஓவியன். எப்பொழுதும் ஏதாவது வரைந்து கொண்டும், எதிலாவது கிறுக்கி கொண்டும் இருப்பான். அன்று அவன் கையில் சிக்கியது குட்டையனின் ஐடி கார்டு தான். சிறுது நேரத்தில் அதில் அழகான ஓவியம் ஒன்று உருவாக்கிவிட்டான். ஐடி கார்டில் இருந்த குட்டையனின் முகத்தில் உதடு மற்றும் கண்ணை தவிற மற்ற அனைத்து இடத்திலும் கருப்பு கலர் அடித்துவிட்டான். ஏன் என்று தெரியவில்லை அது குட்டையன் முகத்தை அகோரமாக்கி இருந்தது ( முதலில் அழகாக இருந்ததானு கேட்காதீங்க
). இதோடு நிறுத்தி இருந்தால், குட்டையனும் கூட சேர்ந்து சிரித்திருந்துப்பான். இதோடு நில்லாமல் அவன் ஐடி கார்டு க்ளாஸ் முழுவதும் சுற்றி வர ஆரம்பித்தது. இதை எல்லாம் செய்து முடித்துவிட்டு மெதுவாக மைதானத்துக்கு சென்றுவிட்டோம். மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் தூசி மண்டலம் ஒன்று உருவாகுவது போல தெரிந்தது. ஆகா குட்டையன் தான் ஆக்ரோஷத்தில் ஒடி வந்து கொண்டிருந்தான். வந்து செந்திலை அடிக்க பாய்ந்தான், அந்தோ பரிதாபம் PT வாத்தியாரிடம் மாட்டிக் கொண்டான். அவர் வைத்த குட்டில் அவன் மண்டை வீங்கியது தான் மிச்சம். எப்படியோ அன்று அவனிடம் இருந்து தப்பி வீட்டுக்கு சென்றோம். பஸ்சில் போகும் பொழுது ஏதோ ஒரு கிராதகன் ஐடி கார்டு பெண்கள் பக்கம் சென்ற விசயத்தை குட்டையனிடம் சொல்லி இருக்ககிறான்.அதனால் தான் இன்னும் குட்டையனின் கோபத்திற்கு காரணம்.
ப்ளாஷ்பேக் முடிந்தது. இன்னும் வீட்டுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருந்தோம். வாரம் வாரம் குட்டையன் வீட்டுக்கு சென்று சேர்ந்து படிப்பது வழக்கம். சரி நம்ப மாட்டீங்க, குட்டையன் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். குட்டையன் படு ஹாட்டாக் இருந்தான். உள்ளே நுழைந்தவுடன் தவ்வி விட்டான் ஒரு குத்து செந்திலின் நெஞ்சில். என்னதான் பையன் குட்டை என்றாலும் வானில் இரண்டடி தவ்வி அடிப்பதில் கெட்டிகாரன். அடுத்து கேள்வி கனைகளை தொடுக்க ஆரம்பித்தான். “ஏன்டா அப்படி பண்ணீங்க ?, ஏன்டா பாஸ் பண்ணிவிட்டீங்க ?, சரி ஏன்டா பொண்ணுக பக்கம் கொடுத்தீங்க ? , என் இமேஜே போச்சு டா”, என அடுக்கிக் கொண்டே போனான் குட்டையன். இதுவரை நொறுக்கு தீனிகளை அரைத்து கொண்டிருந்த ஒட்டகம் எழுந்தான். “ஏன்டா குட்டையா, இல்லாத இமேஜுக்கு ஏன்டா இவ்வளவு பில்டப்பு” என்றான். குட்டையனுக்கு கொஞ்சம் அவமானமாகி போனாலும் மறுக்க முடியாத உண்மை என்பதால், அமைதியாக இருந்தான். “இல்லடா பொண்ணுக எல்லாம் பார்த்து சிரிச்சாங்கடா” என்றான் குட்டையன் பாவமாக. எனக்கும் செந்திலுக்கும் மனம் லைட்டாக வருத்தபட்டது. எதற்காக ? குட்டையனுக்காகவா ? ச்ச ச்ச இல்லவே இல்லை. அந்த காட்சியை நாம் காணமுடியவில்லையே என்ற வருத்தம் தான். ஆனால் ஒட்டகமோ அசரவில்லை, “இது என்ன புதுசா ? இதுக்கு முன்னாடி உன்னை பார்த்து சிரிச்சதில்லையா ? புதுசா அசிங்க படுற மாதிரி ஏன்டா பிட்ட போடுற ? போ போய் உட்காரு, வா டிவி பார்க்கலாம்” என்று முடித்தவுடன் குட்டையனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகு பொழுது மதியம் நல்ல சாப்பாடு, டிவி என முடிந்தது.
சரி இவ்வளவு சொல்லிட்டு கதையின் நீதி சொல்லவில்லை என்றால் எப்படி, “இல்லாத இமேஜை காப்பாற்ற கஷ்ட படாதீங்க”. சரி இது உங்களுக்கு பொருந்துமானு கேட்காதீங்க, பதில் சொல்ல மாட்டேன்.
2 comments நவம்பர் 14, 2008