பீமின் டவுட்டு

காலை ஏழு மணி,  அதிகமில்லாத குளிரும், இதமான வெயிலுமாக நல்ல உறக்கத்தை கொடுத்தது, ரோட்டோரமாக  படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் நம்ம ஹீரோ பீம். அதி வேகமாக ஹாரன் சத்தத்துடன் சென்ற வேன் அவன் தூக்கத்தையும் கூடவே தூக்கிச் சென்றது. எழுந்து பார்த்தான், நிம்மி, நிக்கி, மினியின் ஸ்கூல் வேன். தூக்கம் கலையாத விளிகளுடன், ஏறி சென்றனர் குழந்தைகள்.  ஐயோ பாவம், 23 வயதில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இவர்களின் பெற்றோர் படுத்தும் பாடு. ஐந்து வயதில் என்னவெல்லாம் செய்கின்றனர், வாழ்க்கையை அனுபவிப்பதை தவிர, என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்த இரண்டு மணி நேரம் அவனுக்கு பிடிக்காத நேரம், தலை போகிற அவசரத்தில் அலுவலகம் செல்லும் நேரம். சற்று ஒதுக்குப் புரமாக சென்று பார்த்த்க் கொண்டிருந்தான்.  அலுவலகம் போகும் அவசரத்தில் யாருக்கும் நிற்காத வண்டிகள், ரோட்டரமாக கேட்பாரற்று கிடக்கும் இவனுக்காகவா நிற்க போகின்றன ? அலுவலகத்தில் என்னத்த சாதிப்பார்களோ, ஆனால் போகிற வேகத்தை பார்த்தால், ஏதோ கோட்டையை பிடிக்க போகிற மாதிரி தான் தெரியுது.  ஜம்மென்று பின்னாடி உட்கார்ந்து கேள்வி கேட்கும் மனைவிகளின் ஆர்பாட்டத்தை கேட்டுவிட்டு ரியாக்சன் கொடுக்காத கணவன்களின் வாகனங்கள், நான் நேர் கோட்டில் தான் செல்வேன் அதுக்குள்ள நீயும் வரக்கூடாது, நானும் வெளிய  வரமாட்டேன் என்று தனியே ஒட்டும் பெண்களும், அவர்களை முந்திச் சென்று வித்தைக் காட்டும் பசங்களும், இவர்களை மதிக்காமல் ரோட்டின் நடுவில் செல்லும் கார்களும், யாரையுமே மதிக்காமல் ரோடை அடைதுக் கொண்டு செல்லும் வேன்களும் லாரிகளுக்கும் தான் அடுத்த இரண்டு மணி நேரம் அந்த ரோடு சொந்தம், பீமுக்கு இல்லை.

ஆனால் பீமுக்கு பிறந்தநாளில் இருந்தே பெரும் சந்தேகம். ஏன் இப்படி ? எதற்காக இந்த ஓட்டம் ? வயிற்றுக்காக தானா ? ஏன் அவன் இல்லையா ?  அவன் வாழவில்லையா ? அவனுக்கு தெரிந்த அவன் நண்பர்கள் க்ளின்டன், புஷ், புடின் எல்லாம் இல்லையா.ஏன் தான் இவர்கள் இப்படி அலைகிறார்களோ என்று நினைத்துக் கொண்டான்.  பாவம், ஆண்டவன் இவர்களையும் தன்னை போல படைத்திருக்கலாம்.

அவனுக்காக சாப்பாடு வருவது தெரிந்தது. எதிர் வீட்டு மாமி, அவனுக்காக இட்லி கொண்டுவந்து கொண்டிருந்தாள். ஆம், க்ளின்டன், புஷ், புடின், பீம் என்ற அவள் தெருவில் இருக்கும் நாய்களில் அவளுக்கு பிடித்தது, பீம் தான். சூடான இட்லி சாப்பிட சென்றான் பீம், பாவம் அவனுக்கு எங்கே தெரிய போகிறது, மனிதனின் ஆசை பற்றி. அவனுக்கு தேவை ஒரு வேலை சாப்பாடு,  மனிதனுக்கு அப்படியா ? சொல்லுங்கள் மனிதர்களே !!!

செப்டம்பர் 4, 2010 at 12:11 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

சித்திர பாவை – அகிலன்

சில நாட்களுக்கு பிறகு மீன்டும் ஒரு தமிழ் நாவல். கல்கியின் நாவல்களான, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என சரித்திர கதைகளை படித்துவிட்டு, சரித்திர நாவல்கள் மட்டுமே என்ற முடிவில் இருந்தேன். ஆனால், மூத்த நண்பர்கள் சில பேர் கூறவே, சித்திர பாவை படிக்க முடிவு செய்தேன். அண்ணன்களின் அறிவுறை என்றும் தப்பாக போவதில்லை.

ஆரம்பம் முதலே அம்ர்க்களமாக இருந்தது. ஒவியக் கலையே உயிர் என்றும், எளிமையாக வாழ வேண்டும் என்ற என்னம் கொண்ட சில மனிதர்களையும், பணமே வாழ்க்கை என்றென்னி வாழ்பவர்களையும், அவர்களால் நல்லவர்களுக்கு வரும் கொடுமையையும் அழகாக சித்தரித்திருக்கிறார். ஓவியக் கலை எவ்வாறு அழிந்துக் கொண்டிருக்கிறது, நடுத்தர மக்களின் விபரீத ஆசைகள், அதன் விளைவுகள் என்ன என்பதை பல இடங்களில் சுட்டிகாட்டியிருக்கிறார்.

1970களில் எழுதப்பட்ட கதையாக இருந்தும், கதையில் வந்த அனைத்தும், இன்றும் அப்படியே பொருந்தும். கதையின் கரு,

“அழகாய் வாழக் கற்றுக் கொள்; முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு”.

இதை கதையில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்களின் உதவியோடு செம்மையாக் சொல்லி இருக்கிறார். அண்ணாமலையின் வாயிலாக ஒரு ஒவியக் கலைஞனின் வாழ்க்கை, ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தின் வழியாக ஒரு அழகிய பொறுமையான பெண்ணின் வாழ்க்கை, அதற்கு எதிர்மாறாக இருக்கும் சுந்தரியின் வாழ்க்கை, மாணிக்கம் என்னும் கதாபாத்திரத்தின் வழியாக பணவெறி பிடித்தால் என்ன ஆகும் என்றும் அழகாக எடுத்துறைத்துள்ளார். கதையின் நடுவே வரும் அறிவுரைகள் என்றென்றும் கடைபிடிக்க வேண்டியவை. முடிவில் அசுர வேகம், எதிர்பாரத சில திருப்பங்கள் இன்னும் கதையை வேகமாக நகர்த்தி செல்கின்றன.

சில நாட்களுக்கு பிறகு நல்ல புத்தகம் படித்ததில் திருப்தி.  படிகக வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

ஜூலை 17, 2010 at 8:22 பிற்பகல் மறுமொழியவும்

குடிமகனே குடிமகனே

9.15 பஸ்சை பிடிக்க அவசர அவசரமாக சிட்டி பஸ்சை பிடித்தேன். ஆகா கடைசி சீட் காலியாக் இருந்தது.  பஸ்ஸின் கடைசி சீட் என்றால் பிரச்சனை இல்லை, குடும்ப மக்கள் அதிகம் அண்டுவதில்லை, பஸ்சிலும் மனைவியை  பிரிய விருப்பமில்லாமல் தனியாக இருக்கும் பசங்களை எழுப்பிவிடும் கணவன்கள் பெரும்பாலும் வருவதில்லை, ஏதோ கடைசி சீட் என்றால் வேடிக்கை  பார்த்துக் கொண்டோ, ஊரையோ, நம்மையோ, இல்லை நேற்று ஆபீசில் பார்த்த் பெண்ணையோ பற்றி யோசித்துக் கொண்டு செல்லலாம் என்பது எண்ணம்.

ஆனால் அரசு பேருந்து என்றால் அவ்வளவு சொகுசாக இருக்குமா என்ன, அடுத்த நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தது இம்சை, இந்திய ‘குடி’மகனின் ரூபத்தில். கிக் ஏறிய சிங்கம் படக் என ஏறி அமந்தது, துரதஷ்ட்டவசமாக என் அருகில். சில மப்பு மன்னர்கள் கிக் ஏறிய உடனோ இல்லை பஸ் ஏறிய உடனோ மப்பு மற்றும் வாயின் உதவியோடு உலகையே திட்டி தீர்ப்பார்கள், ஆனால் இவரோ ஏறிய உடன், மட்டையாகிவிட்டார் என் தோழில். சில நேரம் பொறுத்து பார்த்தேன், ஒன்றும் சரிபட்டு வராமல் போக செயலில் இறங்கினேன். ரனகலமா எதுவும் எதிர்பார்க்காதீங்க, ஒரு சீட்டு தள்ளி உட்கார்ந்தேன்.

இதை எப்படியோ பார்த்த குடிமகன், கால்களை நீட்டி படுக்க முயற்சித்து, இட பற்றாற்குறை காரணத்தால், தன் காலை அந்த மூலையில் இருந்தவரின் மேல் போட்டுநீட்டி நிமிர்ந்து படுத்தார். வேறு வழி இல்லாமல் அவர் இடம்பெயர்ந்தார். அடுத்து இடைஞ்சலாக இருந்தது நான். தலையை வைத்து முட்ட ஆரம்பித்த்வுடன் நானும் எழுந்து முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்தேன். கடைசி சீட்டில் கிடைத்த் களிப்பில் மெத்தையில் படுப்பது போல் படுத்து தூங்க ஆரம்பித்தார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்டக்ட்டர் சும்மா இருப்பாரா ? அப்படியே ஷாக் ஆயிட்டாரு.  “டிக்கெட் எடுத்தான சார் இவன் ? எங்க ஏறினான் ? ” என கேள்வி கனைகளை தொடுத்தார். டிக்கெட் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தபின், மயங்கி கிடக்கும் குடிமகனிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். கண்டக்டரின் நம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். அடித்து எழுப்பி பார்த்தார், போலீஸ் என்று மிரட்டி பார்த்தார், ஒன்னும் வழியில்லை. விடாமுயற்சியினால் எப்படியோ எழுப்பிவிட்டார். டிக்கெட் வாங்க முடிவு செய்த குடிமகன், 200 ருபாயை எடுத்துக்  கொடுத்தார் 7 ருபாய் டிக்கெட்டுக்கு, திரும்பவும் கும்மென்று தூங்க ஆரம்பித்தார். பாவம் கண்டக்டர், டிக்கெட் கொடுத்துவிட்டு, சில்லரையை பாக்கெட்டில் புகுத்திவிட்டு நான்கு ஐந்து நல்ல வார்த்தைகளால் வாழ்த்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் நான் இறங்கிவிட்டேன். குடிமகனுக்கு என்ன ஆனது தெரியவில்லை, கண்டக்டரின் கோபத்தை பார்த்தால் ஒன்று அடித்து இறக்கிவிட்டிடுப்பார் அல்லது போலீசிடம் ஒப்படைத்திருக்கலாம்.

அடுத்த நாள், ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு குடிமகன், வயிறு முட்ட குடித்துவிட்டு ரோட்டோரமாக சொர்க்கத்தில் தூங்குவது போன்று தூங்கி கொண்டிருந்தார்… அருகில் ஒருவர் அமர்ந்து அவரை எழுப்பவது போல் இருந்தது. உற்று பார்த்தவுடன் தெரிந்தது அருகில் இருப்பவர் எழுப்பவில்லை, குடிமகனின் பாக்கெட்டில் இருந்த அனைத்தையும் தன் பாக்கெட்டிற்கு மாற்றி கொண்டிருந்தார். அருகே 20 அல்லது 30 பேர் இருந்ததும் அவர் செய்வதை பார்த்தும் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. மொழி தெரியாத ஊரில் பிழைக்க வந்த ஊரில் வம்பெதற்கு என்று நானும் கண்டுக்கொள்ளவில்லை.

சரி சரி, மொக்கை போதும், ஒவ்வொரு ஊரிலும் தினமும் காணும் காட்சி தான், ஆனால் டவுட் என்னவென்றால், குடிக்கிறது குடிக்கிறாங்க கொஞ்சம் அளவா குடிக்கலாமே.

ஒவ்வொரு முறை இப்படி பட்ட மக்களை பார்க்கும் போது, மனதில் நிற்பது ஒன்று தான், மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்தும் புத்தி ஒருபொழுதும் தண்ணியால் அளித்துவிட கூடாது என்பது தான்.

ஜூன் 25, 2010 at 3:14 மு.பகல் 1 மறுமொழி

கற்பனைக் கோட்டை

காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து. தலையில் விழுந்த குட்டு தாங்க முடியாமல் அலாரம் வாயை மூடிக் கொண்டது. தூங்கவும் முடியாமல், தூக்கத்திலிருந்து எழவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தான் அவன், கதையின் கதாநாயகன். அலாரம் உதவுவதைவிட அவனுக்கு அதிகமாக உதவுவது ஒவ்வொரு நாளும்  இருக்கும் மீட்டிங் தான். அன்றும் இருந்தது 9.30க்கு.

அதிவேகமாக கிளம்பினாலும், அலுவலகம் செல்ல நேரமாகிவிடும் போல் இருந்ததால், ஆட்டோவின் உதவியை நாடினான். 2 கிலோமீட்ட்ருக்கு 50 ருபாய், கேட்டான். “என்னனே இவ்ளோ  ?” என்றதற்கு, “அங்க திரும்ப சவாரி கிடைக்காது சார், சாப்ட்வேர் இஞ்சினியர் நீங்களே இப்படி சொல்லலாமா ?” என்பது தான் பதில். ஆனால் அவன் ஆட்டோவில் செல்லவில்லை. அட்டோகாரன் அதிகம் கேட்டாலும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் காரணம், காய்கறி விலை கூடினாலும் அவர்களே தான் காரணம். இவ்வளவு நாள் அரசு ஊழியர்கள் இப்பொழுதோ சாப்ட்வேர்  இன்ஜினியர்கள், மக்களுக்கு குறை சொல்ல யாராவது இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எப்படியோ கம்பெனிக்கு 9.31கு சென்றுவிட்டான். 11.00 க்கு மீட்டங் சுபமாக முடிந்தது. இருந்தாலும் அவன் மேனேஜர் முகம் மட்டும் உர் என ஏன் இருந்தது என புரியவில்லை.

கையில் காபியுடன் அவுட்லுக்குள் லுக்கை செலுத்தினான். தேவையில்லாத மெயில்களுக்கு நடுவே இருந்தது, அவன் மேனேஜரின் மெயில். நேற்று அவன் செய்வதாக சொல்லி இருந்த 10 விஷயங்களில், ஒன்று முடிக்கவில்லை என்றும் அது ஏன் என்றும், இவ்வாறு வேலை செய்தால் உருப்படாது என்பது போலவும் இருந்தது மெயில். இது வழக்கம் தான், எவ்வளவு செய்தாலும் தவறுகள் மட்டுமே தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். அது எப்படி என்பது இதுவரை அவனுக்கு புரிந்ததில்லை. ஆனால் அவரின் மெயில் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கோபம் மட்டும் எரிமலை போல பொங்கி அடங்கும், வேலையின் மீது வெறுப்பு வரும், மேனேஜர் மீது கோபம் வரும். அவனால் முடிந்தது அவ்வளவு தான்.

அடுத்து வேலையில் மூழ்கினான். பிரேசில் கஸ்டமர் கேட்ட விடைகளுக்கு தெளிவாக பதில் அளித்தான். பாவம் அவர்கள் கணக்கில்லாமல் செலவழித்துவிட்டு விடைக்காக நிற்பவர்கள், அவர்களை அவன் என்றும் நிற்க வைப்பதில்லை. அடுத்து ஒரு மணிக்கு சாப்பாடு. சாப்பாடின் வாசனை மட்டுமே போதும் அவனுக்கு, அதற்கு மேல் சாப்பிட தோன்றுவதே இல்லை. ஏன் என்று அவனுக்கும் தெரிந்ததில்லை. பதார்த்தங்களின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும் தினமும், லக் இருந்தால் புழு பூச்சியை சாப்பாட்டில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும், அவ்வளவு தான். என்ன செய்வது. கம்ப்ளெய்ன்ட் செய்தால் வேறு ஒரு ஹோட்டல்காரன் வருவான், ஒரு வாரம் நன்றாக இருக்கும், அடுத்த வாரம் அதே கதை தான்.

சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். நேரம் முடிந்துக் கொண்டே இருந்தது, வேலை இருந்துக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு  ஃபோன் செய்தான். பக்கத்து வீட்டு ஆண்டியும் இருந்தார்கள் வீட்டில். ஆண்டியுடன் பேச வேண்டிய சூழ்நிலை. அவர்களோடு  அதிகமாக் பேச விரும்புவதில்லை, இருந்தாலும் மாட்டிக் கொண்டான் இன்று,

“என்னப்பா எப்படி போகுது வேலை ? “

“நல்லா போது, ஒன்னும் பிரச்சனை இல்ல”.

“எல்லாம் டவுனுனு கேள்விப்பட்டேன்” (பார்க்கும்போது எல்லாம் இதே கேள்வி தான்).

“ஆமாஆன்டி, எங்க டீம்ல பிரச்சனை இல்ல”

“சரிப்பா மணி கூட சொல்லிட்டே இருந்தான்,சாப்ட்வேர் அவ்வளவு தான், அப்படினு, இது நிலைக்காதுபா, தெரிஞ்சு தான் நாங்க மெக்கானிக்கல் எடுத்தோம்” (தெரிஞ்சா எடுத்தீங்க, cs இல்லைனுல எடுத்தீங்கனு சொன்னா ஒத்துக்கவா போறீங்க ?)

“சரிப்பா உடம்ப பார்த்துக்கோ”

எல்லா வேலையும் முடிச்சுட்டு வர இரவு பன்னிரெண்டு, பெர்சனல் மெயிலை புரட்டிவிட்டு சில வேலைகளை முடித்துவிட்டு படுக்க 2. காலேஜ் நினைவுகள் கண் முன் வந்து நின்றன. சாப்ட்வேர் இஞ்சினியர் பற்றி அவனுக்கு அதுவரை தெரிந்தது எல்லாம், மனசுக்கு பிடித்த வேலை, கம்பெனி முழுவதும் அழகான பொண்ணுக, கை நிறைய சம்பளம், எதையும் வாங்க முடியும் சம்பளம், அவ்வளவு தான். வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது, அப்படி இல்லை என்று. அதுவும் நம்ம தமிழ் படங்கள்  “கற்றது தமிழ்”, “அறை எண் 305ல் கடவுள்” எல்லாம் பார்த்தா அவ்வளவு தான். கற்றது தமிழில் காமிச்சது போல அறைக் குறை ஆடைகலுடனும் யாரும் வருவதில்லை, “அறை எண்” படத்தில் காட்டியது போல சும்மா சம்பளம் கொடுப்பதில்லை. ஏன் இவ்வளவு கேவலமாக படங்களில் காட்ட வேண்டும் என்று நினைத்த போது கோபம் வந்தது.  கஷ்டப்பட்டு மானத்தோடு உழைத்து வாழ்வதை இப்படி சித்தரிக்கிறார்களே என்று நினைக்கும் போது  கோபம் உச்சியைத் தொட்டது. அதுவும் இதை சொல்வது யார் என்றால், பெண்களை அறைக் குறை ஆடைகளுடன் ஆடவைத்து காதலை வத்து காமெடி பண்ணி காசு சம்பாதிக்கும் கோஷ்டி. “என்ன கொடுமை சரவணன் இது” என நினைத்துக் கொண்டான். அவன் காலேஜில் கட்டி வைத்திருந்த கற்பனை கோட்டை மெதுமெதுவாக தகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மக்க்ளின் கற்பனையோ எல்லை இல்லாமல் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு நினைத்துக் கொண்டே தூங்கி போனான். காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து.

ஜூன் 17, 2009 at 2:53 மு.பகல் 4 பின்னூட்டங்கள்

விருப்பமில்லாத இடைவெளி

ஒரு மாதத்திற்கு மேலே ஆகிவிட்டது, இந்த வலைபதிவில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் பதிவு செய்து. அதுக்காக ஏதோ பெருசா இருக்குனு நினைக்காதீங்க. வழக்கம் போல மொக்கை தான். சரி இரண்டு மாசமா என்ன நடந்சுச்சுனு யோசிச்சுப் பார்த்தேன். இரண்டு படம், இரண்டு  டூரு,  இரண்டு  குட்டி கதையும் கவிதையும் மனசுல தோன்றி, சோம்பேறி தனத்தால பதிவு செய்யாம, சின்ன மூலைக்குள்ள் ஒரு ஓரத்துல இருக்கு, அத மெதுவா தூசித் தட்டி, பெயர் வைச்சு, பதிவு செய்யனும். அத கூடிய சீக்கிரத்துல செய்வேன் அப்படினு சொல்றதுக்கு தான் இப்ப இந்த பதிவு. ஒகே ஒகே கூல் டவுன்.

சரி நான் போன சுற்றுலாக்கள் மற்றும் படங்கள் பற்றிய தகவல்கள் ஆங்கில வலைபதிவுல இருக்கு. தமிழ்ல அடிக்க நேரம் கிடைக்கல. இனிமேலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி தமிழ் வலைப்பதிவுல ஏதாவது அடிக்கனும். பார்ப்போம் நம்ம நினைக்குறது ஏதாவது நடக்குதானு.

ஜூன் 4, 2009 at 6:31 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

வெண்ணிலா கபடி குழு

சொல்ல்வா வேண்டாமா ? ஏற்கனவே பல பேர் சொல்லிருப்பாங்க நாமும் சொல்லனுமா ? தேவையா ?  இப்படி எல்லாம் யோசிச்சேன். சரி கடைசியா ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு படம் பார்க்குறோம் எதுக்கு அத பத்தி சொல்லாம இருக்கனும் நினைச்சு சொல்றேன்.  சில காலமாகவே படம் எதுவும் பார்க்கவில்லை. அபியும் நானும், பூ என ஏகப்பட்ட படங்கள் விட்டு போனதில் வருத்தம். ஹோலிக்காக மார்ச் 11, புதன்கிழமை கம்பெனி லீவ், அதுவும் எங்க கம்பெனி மட்டும் லீவு. சரி வெண்ணிலா கபடி குழு படத்துக்கு போவோம் என முடிவு செய்தோம். புதன்கிழமை தியேட்டரில் எங்களையும் ஒரு பத்து ஜோடிகளையும் தவிர கூட்டம் இல்லை. படம் பார்க்க சென்றவர்கள் நாங்கள் மூவர் மட்டும் என்று தான் நினைக்கிறேன். படத்தில் பெயர் போடும் போது பார்த்தால், அறிமுகம் என்றே ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தனர். ஆனால் படம் நன்றாக தான் இருந்தது, ரொம்ப நல்லாவே இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் படம் குதூகலமாக சென்றது. படம்போன வேகமே தெரியவில்லை. வசனங்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் நடிப்பு நன்றாக தான் இருந்தது. சரண்யா மோகன் மிக குறைந்த நேரமே வந்தாலும் நினைவில் நிற்கிறார். சென்னை 28 மாதிரியே கதை இருக்கிறதோ என்று ஒரு டவுட் வருகிறது. கடைசியில் படத்தில் ஒரு ட்விஸ்ட். அங்க கொண்டு போய் எதுக்கு அந்த டுவிஸ்டுனு இயக்குனருக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் படம் சூப்பர், பார்க்கலேனா பாருங்க.

மார்ச் 24, 2009 at 7:48 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

நான் கடவுள் – விமர்சனம்

காலை ஆறு மணிக்கு நான்கு அலாரங்கள் அடிக்க, அவசர அவசரமாக கிளம்பி காலையில் வயிற்றுக்கு எதுவும் உண்ணக் கொடுக்காமல், ஓடி சென்று தியேட்டரில் உட்கார்ந்தோம். அன்று பரீட்சைக்கு காட்டும் அக்கறையை விட இன்று படத்துக்குக் காட்டும் அக்கறைத்தான் அ திகம். படத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள். சில இடங்களில் கொஞ்சம் கொடுரமாக இருக்கும் என்று தான் எண்ணினோம். ஆனால் படம் முழுதுமே அப்படி தான் இருந்தது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியதே கதை. அகோரி சாமி வேடத்தில் வரும் ஆர்யா வருவது சில நேரம் தான். மற்ற நேரங்களில் பூஜாவும் அவளோடு வில்லன்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் மக்களும் தான் வருகின்றனர். அவ்ர்கள் நடிப்பும் புகழும்படியாகவே இருந்தது. பூஜா மற்றும் அவர்களது நடிப்பை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும். பூஜாவுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஆர்யா வருவதோ சில காட்சிகள் தான் என இருக்க அவர் எதற்கு மூன்று ஆண்டுகள் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர். பாலா மிக மிக  தத்ரூபமாக எடுக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டதாக தோன்றுகிறது. சில இடங்களில் நம்மை நெகிழ வைப்பதற்கு பதிலாக் நெளிய வைக்கிறது. கடைசி காட்சியில் பூஜாவின் நடிப்பு அபாரம், ஆர்யாவின் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது, பாலாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆனால் படத்தில் ஒரு முழுமை இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் எனக்கு படம் பிடிக்கவில்லை.

பெப்ரவரி 10, 2009 at 2:36 மு.பகல் 2 பின்னூட்டங்கள்

வருங்கால போலீஸ்

சென்ற வாரம் RTO ஆபீசுக்கு சென்றிருந்தேன். தேர்வை முடித்துவிட்டு புகைப்படம் எடுப்பதற்காக காத்திருந்த போது ஒருவரை சந்தித்தேன். அவருக்கும் பேசுவதற்கு யாரும் இல்லை, நானும் தனியே இருந்ததனால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  வேற வழி ? விசாரித்ததில் இப்பொழுது லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதும், அதனால் லைசன்ஸ எடுப்பதற்காக வந்திருப்பதாகவும் தெரியவந்தது. மேலும் தன்னை பற்றி சொல்லத் தொடங்கினார். போலிசில் சேருவதற்கு முயற்சித்து வருவதாக கூறினார். ச்ச பரவாயில்லியே என்று பேச்சைத் தொடர்ந்தேன்.  “சரி வேலைக்கு சேருவதற்கு பணம் கேட்பாங்கலே” என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் நன்றாக இருந்தது.

“ஆமா கேட்பாங்க. அனால் வேலைக்கு சேர்ந்த உடனே சம்பாதிச்சுரலாம்ல. இரண்டு மாசத்துல எல்லாத்தையும் முடிச்சுரலாம். அப்பறம் என்ன பிரச்சனை. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் போலீஸ்ல இருக்காரு. அவர் எங்க போனாலும் காசே கொடுக்கமாட்டாரு. நான் இந்த ஊர் போலீஸ் அப்படி இப்படினு முடிச்சுருவாரு. கடைக்காரனும் ஒன்னும் கேட்கமாட்டான், நம்மகிட்ட தான் துள்ளுவான்” என கூறி முடித்தார். என்ன சொல்வது என தெரியவில்லை சும்மா ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

ஜனவரி 31, 2009 at 3:46 பிற்பகல் 1 மறுமொழி

பூனாவில் பொங்கல்

ஒரு வாரம் லீவ் என்பதாலும், அக்காவின் குழந்தையைப் பார்க்க இதைவிட்டால் வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதாலும், இந்த வருடம் பொங்கலை பூனேவில் கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து கொண்டாடியும் முடித்தாகிவிட்டது. 14 மணி நேர பயணம் இனிதாக இருந்தது, பயணத்தின் போது ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது. K.S.R.T.C யில் கன்னட படங்களை தவிர வேறு மொழி படங்கள் போடக் கூடாது என்பது தமிழ்நாட்டிற்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான். ஏனென்றால் நான் வந்த பேருந்தில் ஹிந்தி படமும் பாட்டும் தான் ஓடியது. சரி ஹிந்தி தான் கொஞ்சம் கொஞ்சம் பார்க்கலாம் என நினைத்தால், போன வாரம் பார்த்த அதே கஜினி. சரி என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கும் போது தான் அவளை கண்டேன். இரவு முழுவதும் அவளுடன் பேசுவதிலியே பொழுது சென்றது. நான் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

சரி நம்ம பொங்கலுக்கு வருவோம். பொங்கல் சூப்பராக சென்றது. பூனாவில் நம்ம ஊர் ஐட்டங்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தாலும் அலைந்து திரிந்து வாங்கி பொங்கலை கொண்டாடினோம். அப்பறம் வழக்கம்போல டிவியில் போட்ட படங்கள், நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே பொழுது போனது. நிகழ்ச்சிகளில் கவனத்தில் நின்றது இரண்டு விசயங்கள், ஒன்று நடிகர் சிவகுமார் தன் புத்தகத்தை பற்றி பேசியது, மற்றொன்று சாலமான் பாப்பையா பட்டி மன்றம். சிவகுமார் காதலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் கூரியவற்றின் கருத்து என் மொழியில் பின் வருமாறு, “எல்லார்க்கும் டீனேஜ்ல ஒரு சுடர் உருவாகுது, அத ஒழுங்கா பயன்படுத்தினா இன்ஸ்டெய்ன் ஆகலாம் வாழ்க்கையில் நிறையா சாதிக்கலாம். ஆனால் டீனேஜில் வரும் காதலில் மாட்டிக் கொண்டால் எரிந்தும் போகலாம். டீனேஜில் வரும் காதல் ஆற்றில் உள்ள முதலையை போன்றது, யானையைக் கூட நீரில் இழுத்துக் கொன்றுவிடும். காதல் என்பது ஒன்றும் இல்லை இனவிருத்திக்கான ஒரு முதல் படி. ஆகவே இளைஞர்களே டீனேஜில் காதல் செய்யாதீர்கள், முதலில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள், பின்பு காதலை பற்றி சிந்தியுங்கள்”. சாலமான் பாப்பையாவின் பட்டி மன்றமும் கிட்டத்தட்ட இது போன்றே இருந்தது. என் கருத்தும் இந்த விசயத்தில் இதே போன்று இருந்ததனால் என்னை கவர்ந்தது. வேறு நிகழ்ச்சிகளை பற்றி பெரிதாக சொல்வதற்கு இல்லை. வழக்கம் போல தமிழ் தெரியாத நடிக நடிகைகள் தங்களுக்கு தெரிந்த தமிழிலும், தமிழ் தெரிந்த நடிகைகள் தமிழ் தெரியாதது போலவும் பேசி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.ஜனவரி 14ஐ தமிழ் வருடப்பிறப்பு என கலைஞர் அறிவித்து இருந்தாலும், யாரும் அதைக் கொண்டாடியது போல் தெரியவில்லை, நானும் தான்.

பின்குறிப்பு: சரி பேருந்தில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன் என்றேனே, யார் என்ற சந்தேகம் இன்னும் இருந்தால், கீழே வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள், அது வேறு யாரும் இல்லை நிலா தான்.

ஜனவரி 15, 2009 at 7:27 பிற்பகல் மறுமொழியவும்

கஜினி – गजनी

காலையில் 6.45 இரண்டு அலாரம் வைத்து எழுந்து, கிளம்பி பஸ் பிடிச்சு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் அண்ணனை எழுப்பிவிட்டுட்டு, பத்து மணிக்கு தியேட்டர் வாசலில் சென்று நின்றோம் நானும் முசியும். எங்களுக்கே கொஞ்சம் சிரிப்பாக தான் இருந்தது, புரியாத மொழி படத்தை பார்பதற்கு என்ன ஆர்வம் என்று எண்ணி சிரித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களுக்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்பொழுது எப்படி இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். நான் 22 வருடமாக தியேட்டருக்கு சென்று பார்த்த மொத்த படங்களை விட வேலை பார்க்க ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் பார்த்திருப்பேன் என்றே தோன்றுகிறது.

எல்லா தமிழர்களை போல எனக்கும் தமிழையும் ஆங்கிலத்தையும் விட்டால் பிற மொழிகள் தெரியாது. படிக்க அதிக முயற்சிகள் எடுத்ததும் கிடையாது. இருந்தாலும் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அந்த தைரியத்திலும், கஜினி ஏற்படுத்திய எதிர்பார்ப்பினாலும், அசினின் முதல் ஹிந்தி படம் என்பதாலும், முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவெடுத்துவிட்டோம். சரி நம்ம தான் இப்படி என்றால், நம்ம மாதிரியே நம்ம ஊர் மக்கள் பலபேரை தியேட்டரில் பார்க்க முடிந்தது.

படம் எதிர்பார்த்ததை விட செம சூப்பராக இருந்தது. படத்தில் ஒவ்வொரு வசனமும், காட்சியும் தமிழ் கஜினி போல இருந்தாலும், க்ளைமேக்ஸ்ல கொஞ்சம் மாறுதல். தமிழில் கஜினி நல்ல பெயர் ஏற்படுத்தியது என்றால், ஹிந்தியில் அசினுக்கு ஒரு சூப்பர் அறிமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழுக்கு அசின் திரும்ப வருவாரா என்பது தான் சந்தேகம். அசினுக்கு அதே கதாபாத்திரம், கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. படத்தில் அதிக தாக்கம் ஏற்படுத்தியதும் அவரே தான். தனக்கு பழகி போன கல்பனா கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். அதே மாதிரியே நடித்து இருந்தாலும் நன்றாகவே இருந்தது, சலித்து போகவில்லை. அமிர் கான் மொட்டை கஜினியாக நன்றாக நடித்து இருக்கிறார். முருகதாஸ் எங்கெங்கு கதையை இன்னும் மேம்படுத்த முடியுமோ அதை சரியாக கண்டுபிடித்து அழகாக மாற்றி இருக்கிறார். அதனால் படம் பட்டையை கிளப்புகிறது. சில இடங்களில் தமிழ் கஜினியை விட சூப்பராக இருக்கிறது.

ஏற்கனவே தமிழில் பார்த்திருந்தாலும் இன்னொரு முறை பார்க்கலாம்.

பின்குறிப்பு – ஹிந்தியில் गजिनी என்று எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் , ஆனால் போஸ்டர்களில் गजनी  என்றே இருந்தது.  எனது ஹிந்தி தப்பா அல்லது போஸ்டரில் ஏதாவது காரணத்தினால் போடப்பட்டதா என தெரியவில்லை.

December 25, 2008 at 5:20 பிற்பகல் மறுமொழியவும்

Older Posts


 

ஜனவரி 2012
தி செ பு வி வெ ஞா
« செப்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்


Follow

Get every new post delivered to your Inbox.